இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், படகுடன் பறிமுதல்: 2 பேர் கைது

தாளமுத்துநகர், விவேகானந்தர் காலனி கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், படகுடன் பறிமுதல்: 2 பேர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விவேகானந்தர் காலனி கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டுகள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக பதிவு எண் இல்லாத டபுள் இன்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகில் சுமார் 30 கிலோ வீதம் 34 மூட்டைகளில் இருந்த பீடி இலைகளை அந்த படகுடன் கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு பைக்கையும் போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமார் 50 லட்சம் ஆகும்.

இந்த பீடிஇலை கடத்தல் தொடர்பாக திரேஸ்புரம், சிலுவையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜலாலுதீன் மகன் சம்சுதீன் (வயது 39), தாளமுத்துநகர், ஜாகிர் உசேன் நகரைச் சேர்ந்த முருகன் மகன் சுடலைமணி(23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வாகனத்துடன் தப்பி ஓடிய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், பைபர் படகு மற்றும் பிடிபட்டுள்ள 2 பேரையும் கியு பிரிவு போலீசார், தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com