பீலா வெங்கடேசன் மறைவு: எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் இரங்கல்

தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் (55 வயது) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், "ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசனின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா பரவல் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக திறம்பட பணியாற்றிய இவரது மறைவு, மிகப்பெரும் இழப்பாகும்.
பீலா வெங்கடேசனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






