பீலா வெங்கடேசன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார்.
சென்னை,
தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் . பீலா வெங்கடேசன் (வயது 55). ஐஏஎஸ் அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார். இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கடேசன் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகி, பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத்துறை செயலாளராகப் பணியாற்றியவர். மேலும் பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






