

தூத்துக்குடி,
தூத்துக்குடி வியாபாரியிடம் ஆன்லைன் முதலீடு மூலம் ரூ.19 லட்சம் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என மெசேஜ் வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அந்த வியாபாரி தொடர்பு கொண்டுள்ளார். தொடர்ந்து எதிர்தரப்பினர் கூறிய விபரங்களை நம்பி, குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு அவர் பணம் அனுப்பியுள்ளார். ஆரம்பத்தில் சிறிய தொகைக்கு லாபம் கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து பல தவணைகளாக மொத்தம் ரூ.19 லட்சம் வரை அந்த வியாபாரி அனுப்பியுள்ளார். ஆனால், பல மாதங்களாகியும் பணம் திருப்பி வரவில்லை. அத்துடன் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வியாபாரி இதுகுறித்து தூத்துக்குடி சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவ் மகன் முகேஷ் (வயது 36) இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் முகேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.