மழையால் வெற்றிலை தோட்டம் சேதம்: வேதனையில் விவசாயி தற்கொலை

மழையில் வெற்றிலை தோட்டம் சேதம் அடைந்ததால் வேதனை அடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கொமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (55 வயது). வத்தல்மலை அடிவாரத்தில் வெற்றிலை தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த வாரம் பெய்த மழையில் வெற்றிலை தோட்டம் முழுவதும் சேதம் அடைந்தது. இதில் பெருமாள் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி வீட்டில் இருந்து சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதியில் பெருமாள் பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாளின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com