வெற்றிலை விலை கிடுகிடு உயர்வு

வெற்றிலை விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
வெற்றிலை விலை கிடுகிடு உயர்வு
Published on

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை நன்கு விளைந்தவுடன் பறித்து, 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்து ரூ.500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.

தற்போது ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ. 3ஆயிரத்து 200-க்கும் ஏலம் போனது.

வரத்து குறைந்தும், முகூர்த்தங்கள் அதிக அளவில் இல்லாதாலும் வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com