

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்தனகாப்பு அலங்காரம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று பவுர்ணமி பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அம்மனுக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, உச்சிகால பூஜை, தீபாராதனை போன்றவை நடைபெற்றது.
காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, தொடர்ந்து சிறப்பு அன்னதானம் போன்றவை நடந்தது.
வெள்ளி பல்லக்கில் வலம் வருதல்
மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜை, பின்னர் அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.