

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி, அம்பாள், பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பைரவருக்கு ஷோடச உபசாரங்கள் நடைபெற்றன. மங்கள ஆரத்தி நடைபெற்றது.
மேலும் சிவபுராணம், பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பைரவர் வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதேபோல் காரைக்குறிச்சி சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பசுபதீஸ்வரர், சவுந்தரநாயகி, காலபைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.