பாரதியார் பல்கலை. வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்! - மாணவர்கள் பீதி...

யானையை காட்டு பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
பாரதியார் பல்கலை. வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்! - மாணவர்கள் பீதி...
Published on

கோவை,

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி ஒட்டி உள்ள மருதமலை வனப் பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம்.

கடந்த வாரங்களில் தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்புகள் வந்து அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் இன்று பாரதியார் பல்கலைக்கழக பின்புற வளாகத்துக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக அங்கும் இங்கும் ஓடிச் சென்றதால் மாணவ மாணவிகள் பயந்து பீதி அடைந்தனர்.

உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.இருந்தபோதிலும் தொடர்ந்து காட்டு யானைகள் அங்கும் இங்குமாக ஓடிச் சென்றதால் வனத்துறையினர் செய்வதறியாமல் திகைத்தனர்.

மேலும் அதே பகுதியில் யானைகள் முகாமிட்டு இருந்ததால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். மீண்டும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் வராமல் தடுக்க இருபதிற்கும் மேற்பட்ட வனத்துறையினர் பாரதியார் பல்கலைக்கழகம் அருகே முகாமிட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்கு பின்புறம் சுற்றி திரிந்து வருகிறது. யானையை காட்டு பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com