நீர்வரத்து குறைந்ததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியில் இருந்து சரிந்தது

நீர் வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 100 அடியில் இருந்து குறைய தொடங்கியுள்ளது.
நீர்வரத்து குறைந்ததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியில் இருந்து சரிந்தது
Published on

பவானிசாகர்

நீர் வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 100 அடியில் இருந்து குறைய தொடங்கியுள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையின் மொத்த நீர் பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.

100 அடியிலிருந்து குறைந்தது

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை நெருங்கியது. இதனால் அணையில் இருந்து பாதுகாப்பு கருதி பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. அதே சமயம் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் நேற்று அதிகாலை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியில் இருந்து சரிந்து, 99.99 அடியாக குறைந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 913 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,150 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,800 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com