

பவானிசாகர்,
நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வழியாக வரும் மாயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகின்றன.
இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடி. ஆனால் சேறு, சகதிகள் போக 105 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.
அதேபோல் பவானி ஆற்றில் திறக்கப்படும் நீரின் மூலம் அரக்கன்கோட்டை- தடப்பள்ளி மற்றும் காலிங்கராயன் பாசனப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைய தொடங்கியது. நேற்று காலை 10 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 52.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,661 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 750 கன அடியும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 3 ஆயிரத்து 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடிக்கு கீழ் சென்றதாலும், அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதாலும் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.