

ஈரோடு,
கடந்த ஆண்டு 101 அடியில் களை கட்டிய பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டு பாதியாக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹாடா வழியாக வரும் மாயாறும் கலக்குமிடத்தை தேர்வு செய்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆகும். பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் சத்தியமங்கலம் வழியாக கொடிவேரி அணைக்கு வருகிறது. தொடர்ந்து அங்கிருந்து அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசன பகுதிக்கு பிரிந்து அதன்பின்னர் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வந்து சேர்ந்து அங்கிருந்து பிரிந்து பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
இதனால் பவானிசாகரில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள 2 கரையோர பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு 101.42 அடியாக இருந்தது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 381 கன அடியாக இருந்தது. அணையின் நீர் கொள்ளளவு 29.85 டி.எம்.சியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் அதிக அளவில் இருந்ததால் கடந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்துக்காக முழுவதுமாக தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தென் மேற்கு பருவமழை பொய்த்துப்போனது. இதன்காரணமாக அணைக்கு நீர் வரத்து பெரிதும் குறைந்தது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 50.65 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 933 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையில் 4.59 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அணையின் நீர்மட்டம் பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.