தமிழகத்தில் 4 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி

தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் 4 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
தமிழகத்தில் 4 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா போட்டியிட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 20 இடங்களில் ஒதுக்கப்பட்டது.

நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது, பா.ஜனதா 4 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து களம் இறங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தோல்வியை தழுவினர்.

வானதி சீனிவாசன் 53,209 வாக்குகளும், நடிகர் கமல்ஹாசன் 51,481 வாக்குகளும் பெற்றனர். இதனால் பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். மயூரா ஜெயக்குமார் 3-வது இடம் பிடித்தா.

நயினார் நாகேந்திரன்

நெல்லை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், தி.மு.க. சார்பில் லட்சுமணன், அ.ம.மு.க. சார்பில் மகேஷ் கண்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா உள்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எனினும் பா.ஜனதா, தி.மு.க.வுக்கு இடையே பலத்த போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே நயினார் நாகேந்திரன் கணிசமான வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன் வந்தார். பல்வேறு சுற்றுகளின் முடிவில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 90,212 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன் 67,427 வாக்குகள் பெற்றார். இதனால் நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார்.

எம்.ஆர்.காந்தி

நாகர்கோவில் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக எம்.ஆர்.காந்தி களமிறங்கினார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜனை 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். எம்.ஆர்.காந்தி 83,009 வாக்குகளும், சுரேஷ்ராஜன் 71,913 வாக்குகளும் பெற்றனர். 6 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.ஆர்.காந்தி, 7-வது முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். திருமணமாகாத எம்.ஆர்.காந்தி தனது 75 வயதில் சட்டசபைக்குள் முதன் முறையாக நுழைகிறார்.

மொடக்குறிச்சி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக டாக்டர் சி.சரஸ்வதி போட்டியிட்டார். நேற்று வாக்கு எண்ணிக்கையில் போது, டாக்டர் சி.சரஸ்வதி 78 ஆயிரத்து 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 77 ஆயிரத்து 844 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். வெறும் 281 வாக்குகளில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com