4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று - பணிகளுக்கு அனுமதி

10 கடற்கரைகளுக்கு ரூ.100 கோடி செலவில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று - பணிகளுக்கு அனுமதி
Published on

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவளம் கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரை ஆகும். இதற்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டு சிறந்த பொழுதுபோக்கு தலமாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கடந்த 2024-25-ம் ஆண்டில் இந்த கடற்கரையை 5.59 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இதேபோல், 2021-22-ம் ஆண்டு தமிழக அரசின் பட்ஜெட்டில் 10 கடற்கரைகளுக்கு மதிப்புமிக்க நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான திட்டத்தை ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ள அரசு அறிவித்தது. அதன்படி, தற்போது சென்னை மெரினா கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரை, நாகை காமேஸ்வரம் கடற்கரை, கடலூர் சில்வர் கடற்கரை ஆகியவற்றுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதற்காக ரூ.18 கோடியில் இங்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னர் இந்த கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com