

சென்னை,
இந்திய ரெயில்வே பயணிகளுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது இதுகுறித்து தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவித்துள்ளதாவது:-
இனி ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் வரை பயணிகள் தாங்கள் ஏறும் இடத்தை மாற்றிக்கொள்ள முடியும். இந்த புதிய வசதி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது பயணிகளுக்கு பெரிய அளவில் உதவும். ஏனென்றால் இதற்கு முன்பு ஒருவர் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஏறும் இடத்தை மாற்ற விரும்பினால் ரெயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்துக்கு முன்பு மாற்றம் கோரிக்கை வைக்க வேண்டும். இந்த கோரிக்கை ரெயில்வேயால் ஏற்கப்பட்டு ரெயில் புறப்படுவதற்கு முன் தயாரிக்கப்படும் முதல் முன்பதிவு (First Chart) அட்டவணை லிஸ்ட்டில் வெளியிடப்படும்.
ஆனால் தற்போது ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்பு மாற்றம் செய்யலாம். இந்த மாற்றங்கள் இரண்டாவது முன்பதிவு அட்டவணை (Second Chart) லிஸ்ட்டில் காண்பிக்கப்படும். இந்த வசதியை பயணிகள் IRCTC இணையதளம் சேவை வழியாகவோ அல்லது பிஆர்எஸ் கவுண்டர் உள்ளிட்டவற்றின் வாயிலாகவோ பெறலாம். இந்த சமயத்தில் ரெயில் பயணத்துக்கான டிக்கெட் மற்றும் உரிய புகைப்பட அடையாள ஆவணம் கட்டாயம் இருக்க வேண்டும்.
மேலும் இந்த செயல்முறை உறுதியான மற்றும் ஆர்ஏசி டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளுக்கு இது பொருந்தாது. அதேபோல் ஏறும் இடத்தை ஒருமுறை மட்டுமே மாற்றலாம். இரண்டாவது முன்பதிவு அட்டவணை தயாராவதற்கு முன்பே கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.