மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் முட்டுக்காடு படகு குழாமில் படகு போட்டி

மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் முட்டுக்காடு படகு குழாமில் நடைபெற்ற படகு போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்று அசத்தினர்.
மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் முட்டுக்காடு படகு குழாமில் படகு போட்டி
Published on

உலக சுற்றுலா தினம்

உலக சுற்றுலா தினம் 27-ந்தேதி இன்று (செவ்வாய்க்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் 4 நாட்கள் விழாவாக பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, படகுப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் அங்குள்ள படகு குழாமில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடத்தப்பட்டது.இப்போட்டியை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

படகு போட்டி

சுற்றுலா தின விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனி நபர் இயக்கும் படகு, 2 பேர் பங்கேற்கும் படகு என நடத்தப்பட்ட படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று ஆர்ப்பரிக்கும் கடல் நீர் மற்றும் பக்கிங்காம் கால்வாய் நீர் இடையே எந்தவித பயமும் இன்றி துடுப்பு மூலம் படகு ஓட்டி அசத்தினர்.சுற்றுலா வந்த கணவன்-மனைவி, காதலர்கள், தோழிகளுடன் வந்த பெண்கள், வாலிபர்கள், நண்பர்கள் என பல தரப்பினர் ஜோடி, ஜோடியாக 2 பேர் வீதம் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.அதேபோல் படகு குழாம் பணியாளர்கள் பங்கேற்ற படகு போட்டியும் நடத்தப்பட்டது.

பாதுகாப்பு கவச உடை

இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கவச உடை அணிந்து பங்கேற்றனர்.

படகு போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் என தேர்வானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com