

சென்னை,
சென்னை ஓட்டேரி குக்ஸ் சாலையை சேர்ந்தவர் மோகன். இவர், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ஸ்டீபன்(வயது 20). இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் ரஷியாவின் ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார்.
மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவர்களுடன் தங்கி வந்தார். ஸ்டீபன், கடந்த 8 ஆம் தேதி அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு 10-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுடன் சென்றார். பின்னர் நண்பர்கள் அனைவரும் நதியில் இறங்கி குளித்து விளையாடினர்.
அப்போது மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்வதை பார்த்த ஸ்டீபன், அவரை காப்பாற்ற முயன்றார். அதில் ஸ்டீபனும் நீரில் அடித்துச்செல்ல, அதை கண்ட மேலும் 2 மாணவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேரும் நதியில் அடித்துச்செல்லப்பட்டனர்.
சில மணிநேரத்துக்கு பிறகு ஸ்டீபன் உள்பட 4 பேரின் உடல்களும் கரை ஒதுங்கியது. 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான 4 பேரின் உடல்களை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ரஷியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் 4 பேரின் உடலும் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. 12 நாட்களுக்குப் பிறகு ரஷ்யாவில் இருந்து உடல்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது