மதுரையில் 11-ம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு: காவல்துறை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

மாணவரின் மரணம் தொடர்பாக எந்தவிதமான அரசியல் தலையீட்டுக்கும், செல்வாக்குக்கும் இடமளிக்காமல், அறிவியல் பூர்வமான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

மதுரையில் 11-ம் வகுப்பு மாணவர் சடலமாக மீட்பு: காவல்துறை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செல்வபெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

11-ம் வகுப்பு மாணவர்

மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11-ம் வகுப்பு மாணவர் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடிய செயலில் ஈடுபட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

பெற்றோரும் குடும்பத்தினரும் தங்களது பிள்ளையைத் தேடி தவித்த நிலையில், மாணவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது நெஞ்சை உலுக்கும் துயரமாகும். அதைவிட, உடற்கூறு ஆய்வில் மாணவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.

விசாரணை

ஒரு இளம் மாணவனின் உயிரை பறித்த இந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன? மாணவர் எவ்வாறு உயிரிழந்தார்? அவரைத் தாக்கியது யார்? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பன உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் காவல்துறை விரைந்து, பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும்.

மாணவரின் மரணம் தொடர்பாக எந்தவிதமான அரசியல் தலையீட்டுக்கும், செல்வாக்குக்கும் இடமளிக்காமல், அறிவியல் பூர்வமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

இளம் மாணவர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாத வகையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வலியுறுத்தல்

மாணவனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த கொடூர மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com