கிணற்றில் வாலிபர் பிணம்

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்படாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணற்றில் வாலிபர் பிணம்
Published on

உளுந்தூர்பேட்டை

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆயிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் தமிழ்ச்செல்வம்(வயது 28). இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அவரது நண்பரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையை அடுத்த ஒலையனூர் கிராமத்தில் உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் தமிழ்ச்செல்வம் பிணமாக மிதந்தார். இதைப்பார்த்த அப்பகுதிமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து வந்து தமிழ்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழ்ச்செல்வம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com