அழுகிய நிலையில் உடல் மீட்பு: என்ஜினீயர் அடித்துக்கொலையா?

வேப்பந்தட்டை அருகே உடல் அழுகிய நிலையில் என்ஜினீயர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அழுகிய நிலையில் உடல் மீட்பு: என்ஜினீயர் அடித்துக்கொலையா?
Published on

என்ஜினீயர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி விஜயகுமாரி. இவர்களுடைய மூத்த மகன் சம்பத்குமார் (வயது 25), என்ஜினீயர். இந்தநிலையில், சம்பத்குமாருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கராசு, விஜயகுமாரி இருவரும் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். சம்பத்குமார் பாலையூரில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.நேற்று மாலை சம்பத்குமார் வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அருகே வசிப்பவர்கள் வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அடித்துக்கொலையா?

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சம்பத்குமார் உடல் அழுகிய நிலையில் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரை முன் விரோதம் காரணமாக யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com