

சேலம்,
சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. காவல்துறையின் அவசர எண் 100-க்கு அழைத்த மர்ம நபர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துச் சென்று முதலமைச்சரின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், காவல்துறைக்கு வந்த தகவல் பொய்யானது என்பது தெரியவந்துள்ளது.
பிரபலங்களின் வீடுகளுக்கு இதுபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. முதலமைச்சர் பழனிசாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.