

பொள்ளாச்சி,
கோவையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
அங்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் ஆகியவை தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று அடுத்தடுத்து மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பொதுமக்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.