

சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் வரும் 9-ந் தேதி பேருந்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்தவர்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் 9-ந் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்துகளில் பயணம் செய்ய 1,218 பேர் முன்பதிவு செய்திருப்பதாகவும் அவர்களுடைய கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 10 ஆம் தேதிக்குப் பிறகு அரசு எடுக்கும் முடிவுக்கு ஏற்ப பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.