

கன்னியாகுமரி,
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன், பூதப்பாண்டி அருகே ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். உறவினர்களான இவர்கள் இருவரும் சென்னையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்கள். கோவில் திருவிழாவுக்காக இருவரும் விடுமுறையில் குடும்பத்துடன் ஊருக்கு வந்தனர்.
இந்த நிலையில் கலைவாணன் வீட்டுக்கு அய்யப்பனின் மகன் சாய்லேஷ்(வயது 9) வந்திருந்தான். நேற்று காலை கலைவாணன் தனது மகள் வைஷ்ணவி(9) மற்றும் சாய்லேஷ் ஆகிய இருவரையும் கூட்டிக்கொண்டு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் லெமூர் கடற்கரைக்கு வந்தார். அங்கு 2 குழந்தைகளின் கைகளையும் கையில் பிடித்தபடி கலைவாணன் கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பொங்கி எழுந்த ராட்சத அலை அவர்கள் 3 பேரையும் உள்ளே இழுத்து சென்றது. இதில் கலைவாணன் அலையின் பிடியில் இருந்து தப்பினார். தொடர்ந்து கலைவாணன் கூச்சலிட்டபடியே குழந்தைகள் இருவரையும் காப்பாற்ற முயன்றார்.
சத்தம் கேட்டு அங்கு நின்ற நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரருமான ராஜசேகர் அங்கு இருந்த பாதுகாப்பு கவசத்தின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார். அதற்குள் தகவல் அறிந்து வந்த ராஜாக்கமங்கலம் தீயணைப்பு வீரர்கள் கடலுக்குள் இறங்கி அலையில் சிக்கிய வைஷ்ணவி, சாய்லேஷ் இருவரையும் உயிருடன் மீட்டனர்.