

ஊட்டி,
ஊட்டி அருகே கேத்தி பாலாடா பாரதி நகரை சேர்ந்தவர் ஹரிஸ் (வயது 24). இவரது சகோதரி அருகே ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இதனால் ஹரிஸ் அடிக்கடி தனது சகோதரி வீட்டிற்கு சென்று வந்து உள்ளார். அப்பகுதியில் 14 வயது வடமாநில சிறுமியுடன், ஹரிசுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் ஆசைவார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதற்கிடையே சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, பெற்றோர் அதுகுறித்து கேட்டு உள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியின் தாய் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஹரிசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஊட்டி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.