தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி

எங்கு தேடியும் கிடைக்காமல் போலீசில் மகனை காணவில்லை என புகார் அளித்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த 7 வயது சிறுவன், நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அருகில் நடந்து வரும் அரபு மொழி வகுப்பில் கலந்துகொள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றான். இதன் பின்னர் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் சிறுவனை தேடி அங்கு சென்றனர். அங்கு அவன் இல்லாததால் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காமல் போலீசில் மகனை காணவில்லை என புகார் அளித்தனர்.
இந்தப்புகாரின்பேரில் போலீசார் காணாமல் போன சிறுவனை தேடி வந்தனர். இந்தநிலையில் பக்கத்து கட்டிடத்தின் படிக்கட்டின் கீழே உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் பிணமாகக் கிடந்தான். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். மேலும் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தண்ணீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். ஆனாலும் அவன் எப்படி உயிரிழந்தான் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






