

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த செட்டுடையான்பட்டி கிராமத்தில் நேற்று மாலை சிறுவர்கள் இடையே கபடி போட்டி நடைபெறவிருந்தது.
கபடி போட்டிக்காக மைதானத்தை தயார் செய்யும் பணியில் இளைஞர்களும், சிறுவர்களும் ஈடுபட்டிருந்தனர். அந்த கிராமத்தை சேர்ந்த கபடி வீரனும், 9ம் வகுப்பு மாணவனான சிறுவனும் கபடி மைதானத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான்.
அப்போது, மின்சார ஒயர் மீது சிறுவன் மிதித்துள்ளான். இதில் எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவன் கபடி போட்டிகளில் விளையாடி பரிசுகளை வென்றுள்ளான். கபடி மைதானத்தை தயார் செய்யும்போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.