

காரைக்குடி,
காரைக்குடியை சேர்ந்த 13 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் குழந்தை தொழிலாளராக வேலை செய்து வந்தான். இந்நிலையில் அந்த சிறுவன், சிவகங்கை சைல்டு லைன் 1098 எண்ணை தொடர்பு கொண்டு தான் வேலை செய்யும் டீக்கடையில் தன்னை அதிகமாக வேலை வாங்குவதாக புகார் கூறியுள்ளான். அதன்பேரில் சிவகங்கை தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் வேலாயுதம், காரைக்குடி உதவி ஆய்வாளர் கலாவதி, சைல்டு லைன் உறுப்பினர்கள் முகேஷ், கண்ணன், சரவணன் மற்றும் காரைக்குடி தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர். அதில், டீக்கடை உரிமையாளர் சசிகுமார், சிறுவனுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.150 சம்பளம் கொடுத்து அதிக வேலை வாங்குவது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை மீட்ட அதிகாரிகள் அவனை சிவகங்கை குழந்தைகள் நலப்பிரிவில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் கலாவதி கொடுத்த புகாரின் பேரில் டீக்கடை உரிமையாளர் சசிகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.