

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் சோனியா (வயது 23). இவர், பல்லடம் அருகே உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அங்கு உடன் பணிபுரிந்த இடுவாய் பகுதியைச் சேர்ந்த கோகுல கண்ணன் (26) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில வாரங்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சோனியா, கோகுல கண்ணனிடம் வலியுறுத்தி வந்தார். இதனால் கோகுல கண்ணன், காதலியான சோனியாவிடம் பேசுவதை தவிர்த்தார். சோனியாவின் செல்போன் அழைப்புகளை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சேனியா கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம். வீட்டில் யாரும் இல்லாத போது சோனியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் அங்கு சென்றனர். பின்னர், சோனியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த மாணவியின் அறையில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், தன்னை கோகுலகண்ணன் காதலித்து திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து விட்டு, தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால்தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கோகுல கண்ணனை கைது செய்தனர்.