சாலை விபத்தில் மூளைச்சாவு; வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
சாலை விபத்தில் மூளைச்சாவு; வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
Published on

ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் சந்தானம் (வயது 32). இவர், ஊத்துக்கோட்டை தாலுகாவில் தொலைக்காட்சி நிருபராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் தனது நண்பர் ஏழுமலை என்பவருடன் பூண்டியில் இருந்து திருவள்ளூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சதுரங்கபேட்டை பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு நின்றுகொண்டிருந்த பொக்லைன் எந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்த தனியார் பஸ் மீது விழுந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சந்தானம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஏழுமலை சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். சந்தானத்தை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்திருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச்சாவு அடைந்தார். கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி நந்தினி (31) முன்வந்தார். இதன்மூலம் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com