வழக்கில் இருந்து விடுவிக்க வெளிநாடு வாழ் இந்தியரிடம் லஞ்சம்:துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு 2 ஆண்டு ஜெயில்

தூத்துக்குடியில் வழக்கில் இருந்து விடுவிக்க வெளிநாடு வாழ் இந்தியரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

வழக்கில் இருந்து விடுவிக்க வெளிநாடு வாழ் இந்தியரிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

துணை போலீஸ் சூப்பிரண்டு

மதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த 2009 முதல் 2011-ம் ஆண்டு வரை தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார்.

புதுக்கோட்டை தேரி ரோட்டை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் கிருபாகரன் சாம். இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். மேலும் கிருபாகரன் சாமுக்கு சொந்தமான நிலம் புதுக்கேட்டையில் உள்ளது. ஊருக்கு வந்த போது, அந்த நிலத்தை பராமரிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, கிருபாகரன் சாம் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை பேலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரூ.3 லட்சம்

இந்த வழக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரித்தார். அப்போது, அவர் வழக்கில் இருந்து விடுவிக்க கிருபாகரன் சாமிடம் இருந்து ரூ.3 லட்சம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

அதன்பிறகு முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் தரும்படி ஜெயக்குமார் கேட்டார். இதுகுறித்து கிருபாகரன் சாம் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

கைது

இதையடுத்து கடந்த 16.12.2011 அன்று தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகத்தில் வைத்து கிருபாகரன் சாம், ரூ.50 ஆயிரத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் வழங்கினார்.

அப்போது, அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று ஜெயக்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

2 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.செல்வக்குமார் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் சிறப்பு அரசு வக்கீல் எஸ்.ஜென்சி ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com