மனைவி, மகளுடன் கொத்தனார் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

மனைவி, மகளுடன் விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மனைவி, மகளுடன் கொத்தனார் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள சிதறால் வெள்ளாங்கோடு வாழைவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை (வயது 47). கொத்தனார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (45). இவர்களுடைய மகள் நித்யா (26).

ராஜேஸ்வரி சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லை. நித்யாவுக்கு, கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி சிரமப்பட்டு கிருஷ்ணபிள்ளை திருமணம் செய்து வைத்தார். ஆனால் அவர் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும் விவாகரத்து தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடந்து வந்தது.

கடன் பிரச்சினை

குடும்ப சூழ்நிலை, கடன் தொல்லையால் கிருஷ்ணபிள்ளை மிகவும் நொந்து போனார். இதேபோல் அவருடைய மனைவி, மகளும் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உறவினர்கள் 2 பேரிடம், காலையில் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும். அதனால் காலை 6 மணிக்கு எனது வீட்டுக்கு வர வேண்டும் என்று கிருஷ்ணபிள்ளை கூறியுள்ளார். அதன்படி அவர்கள் 2 பேரும் நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்தநிலையில் கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, கிருஷ்ணபிள்ளையும், அவரது மனைவியும், மகளும் படுக்கை அறையில் பிணமாக கிடந்தனர். இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விஷம் குடித்து தற்கொலை

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கடன் தொல்லை, குடும்பத்தில் நிலவிய மோசமான சூழ்நிலை காரணமாக 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உருக்கமான கடிதம் சிக்கியது

மேலும் கிருஷ்ணபிள்ளை எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், மனைவியின் நகைகளை வீட்டின் அருகில் உள்ள ஒரு பெண்ணின் பெயரில் அடகு வைத்துள்ளோம்.

எங்களது உடல்களை வீட்டின் அருகில் உள்ள எங்களுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும். இறுதி சடங்கிற்கான செலவை, மனைவி அணிந்துள்ள நகைகளை விற்று அந்த பணத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com