ஆமை வேகத்தில் நடைபெறும் பாலம் கட்டும் பணி

இடையக்கோட்டை அருகே பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
ஆமை வேகத்தில் நடைபெறும் பாலம் கட்டும் பணி
Published on

ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே உள்ள மார்க்கம்பட்டி சாலை வழியாக திருப்பூர் மாவட்டம் மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் ஆகிய ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. அதில் இடையக்கோட்டை அருகே மார்க்கம்பட்டி சாலையில் புதிதாக தரைப்பாலம் கட்டுவதற்கு பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் தொடங்கப்பட்டது. இதற்காக அந்த பகுதியில் பெரிய பள்ளம் தாண்டப்பட்டு சிமெண்டு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. அதன்பின்னர் பல மாதங்களாக பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் பாலம் வேலை நடைபெறுகிறது என்று எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை.

இதனால் மூலனூர் செல்லும் வாகனங்கள் மார்க்கம்பட்டி வழியாக பாலம் நடைபெறும் இடத்துக்கு வந்து திரும்பி செல்கின்றன. அந்த பகுதியில் மாற்றுச்சாலை அமைத்து இருந்தால் வாகனங்கள் செல்வதற்கு எளிதாக இருக்கும். ஆனால் அவ்வாறு செய்யாததால் மீண்டும் மார்க்கம்பட்டி சென்று மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். அந்த பகுதியில் மாற்றுப்பாதையை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com