வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

குன்னம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
Published on

நகை, பணம் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அல்லா பிச்சை. இவரது மகள் ரஹமத் பீபீ (வயது 55). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக தொகுப்பு வீடு ஒன்றும் கூரை வீடு ஒன்றும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தொகுப்பு வீட்டை பூட்டி விட்டு எதிரில் உள்ள தனது கூரை வீட்டில் ரஹமத் பீபீ தூங்கினார்.

நேற்று காலை தொகுப்பு வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com