கைதிக்கு பிஸ்கட்டில் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற தம்பி கைது

சேலம் மத்திய சிறையில் கைதிக்கு பிஸ்கட்டில் மறைத்து வைத்து கஞ்சா கொடுக்க முயன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
கைதிக்கு பிஸ்கட்டில் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற தம்பி கைது
Published on

தண்டனை கைதி

இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவரை ஒரு திருட்டு வழக்கில் ஆட்டையாம்பட்டி போலீசார் கைது செய்து சேலம் மத்தியை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கோர்ட்டு விதித்துள்ளது.

இந்த நிலையில் கார்த்திக்கை பார்ப்பதற்காக அவருடைய தம்பி சித்தேஸ் (22) என்பவர் நேற்று மதியம் சிறைக்கு வந்தார். பின்னர் அவர் மனு எழுதி அதிகாரிகளிடம் கொடுத்து அண்ணனை பார்ப்பதற்கு அனுமதி பெற்றார். இதையடுத்து கார்த்திக்கிற்கு கொடுப்பதற்காக சித்தேஸ் வைத்திருந்த கிரீம் பிஸ்கட்டை வாங்கி சிறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கஞ்சா பறிமுதல்

அப்போது பிஸ்கட்டில் நடுவில் கிரீமிற்கு பதிலாக கஞ்சா வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 20 கிராம் கஞ்சா இருந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற சித்தேசை பிடித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com