பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பஸ் கண்டக்டர் கழுத்தை நெரித்து கொலை கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது

சேலம் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பஸ் கண்டக்டரை கழுத்தை நெரித்து கொலை செய்த அவரது கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பஸ் கண்டக்டர் கழுத்தை நெரித்து கொலை கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது
Published on

சேலம்,

சேலம் தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 49). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றினார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கும், கணவரை பிரிந்து வாழும் சேலம் இரும்பாலை ரோடு பகுதியை சேர்ந்த சர்வேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.

இந்த நிலையில், சர்வேஸ்வரியின் அக்காள் உமாமகேஸ்வரி (35) விழுப்புரத்தில் கணவருடன் வாழ்ந்து வந்தார். அவரும் குடும்ப தகராறு காரணமாக கணவருடன் கோபித்து கொண்டு சேலத்துக்கு வந்து தனது தாயாருடன் வசித்து வந்தார். அவரை பார்த்த சுப்பிரமணி அவருடைய அழகிலும் மயங்கினார். இதையடுத்து அவருடன் நைசாகி பேசி தொடர்பை ஏற்படுத்தினார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையேயும் கள்ளக்காதல் உண்டானது.

இந்த நிலையில் உமாமகேஸ்வரிக்கு வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருந்தது கண்டக்டருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் உமா மகேஸ்வரியை கண்டித்தார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சுப்பிரமணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில், சுப்பிரமணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சுப்பிரமணி வீட்டுக்கு உமா மகேஸ்வரி மற்றும் 2 ஆண்கள் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து கள்ளக்காதலி உமா மகேஸ்வரியை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன்

விவரம் வருமாறு:-

சுப்பிரமணியின் கண்டிப்பு எல்லை மீறியதாலும், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததாலும் அவரை கொலை செய்ய உமா மகேஸ்வரி தனது கள்ளக்காதலர்களான தளவாய்பட்டியை சேர்ந்த கண்ணன் (46), செங்கானூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (38) ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியின் வீட்டுக்கு உமா மகேஸ்வரி வந்தார். பின்னர் அவர் சுப்பிரமணிக்கு சாத்துக்குடி பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். இதை வாங்கி குடித்த அவர் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். அப்போது அங்கு வந்த கண்ணன், நாகராஜனுடன் சேர்ந்து உமா மகேஸ்வரி, கண்டக்டர் சுப்பிரமணியை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார்.

இந்த தகவலை உமா மகேஸ்வரி போலீசார் விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உமா மகேஸ்வரி, கண்ணன், நாகராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com