

சென்னை,
தமிழகத்தில் பேருந்து கட்டணத்தினை கடந்த 19ந்தேதி உயர்த்தி அரசு அறிவித்தது. இந்த கட்டண உயர்வு கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12 ஆகவும் இருந்தது. அந்தவகை பஸ்களில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகினர். இந்த நிலையில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
ஆனால் கட்டண உயர்வு திரும்ப பெறப்படாது என அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
இந்த போராட்டத்தில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.
#busfare #dmk #demonstration