டயர் கழன்று தனியாக ஓடியதால் பஸ் கவிழ்ந்து விபத்து - பயணிகள் படுகாயம்...!

டயர் கழன்று ஓடியதால் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பயணிகள் அனைவரும் படுகாயம் அடைந்து உள்ளனர்.
டயர் கழன்று தனியாக ஓடியதால் பஸ் கவிழ்ந்து விபத்து - பயணிகள் படுகாயம்...!
Published on

திண்டுக்கல்லில் இருந்து சிலுவத்தூர் வழியாக செங்குறிச்சிக்கு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை இந்த பஸ்சை வி.எஸ்.கோட்டையை சேர்ந்த ராதா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக செங்குறிச்சியை சேர்ந்த நாட்ராயன் என்பவர் இருந்தார்.

பஸ் அக்கரைப்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் முன்பக்க டயர் கழன்று தனியாக ஓடியது.இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இதைபார்த்த அப்பகுதி மக்கள் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் பஸ்சின் டிரைவர், கண்டக்டர், மற்றும் பஸ்சில் பயணம் செய்த நாகல் நகரைச் சேர்ந்த முத்து(வயது47), புகையிலைபட்டியை சேர்ந்த செல்வி(45), நட்சத்திரம்(60), செங்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார்(38), எஸ்.குடையை சேர்ந்த புவனேஸ்வரி(20), அன்பரசன்(2) உள்ளிட்ட அனைவரும் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிலுவத்தூர் ஆரம்ப சுகாதாரநிலையத்திற்க்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com