முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் - பிரேமலதா வலியுறுத்தல்

அரசு கூடுதல் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்கி, மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முக்கியமான பேருந்து நிலையங்களில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற பல பகுதிகளுக்கு போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பல முக்கிய வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், நேரத்திற்கேற்ப பேருந்துகள் இயக்கப்படாததாலும் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் இந்த பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி, முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் அதிக பயணிகள் பயன்படுத்தும் வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு போக்குவரத்து சேவையை மேம்படுத்தி, மக்களின் குறைகளை விரைவாக தீர்க்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், பண்டிகைக் காலங்கள், பள்ளி திறப்பு நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலனையும் தேவைகளையும் கவனத்தில் வைத்து, அரசு கூடுதல் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்கி, மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். "மக்கள் நலனே மகேசன் நலன்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com