

சென்னை
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த மாதம் (ஜனவரி) 19-ந் தேதி அரசு அறிவித்தது. இந்த கட்டண உயர்வு 20-ந் தேதி முதல் நடைமுறைக்கும் வந்தது. ஆனால், அபரிமிதமான கட்டண உயர்வு என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர்.
பஸ் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் 27-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், 29-ந் தேதி மறியல் போராட்டமும் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக, அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சிகள் இதில் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், மதிமு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அபுபக்கர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் 13-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் . சிறையில் உள்ள மாணவர்கள், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராடி கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.