

சென்னை,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநிலத்தின் கடன்சுமையை குறைப்பதற்காகவும், பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காகவும் அரசு மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள் வணிகச்சமூகத்தின் மீது கூடுதல் சுமையை ஏற்றிவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பின்வரும் முக்கிய கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை பெருக்குகிறோம் என்ற பெயரில் வணிகக்கடைகளுக்கான சொத்து வரியையோ, வணிக உரிமக் கட்டணங்களையோ மீண்டும் உயர்த்தக்கூடாது. உயர்த்தப்பட்ட வரிகளை ஒரு சீரான, எளிய முறையில் முறைப்படுத்த வேண்டும். வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணங்களை உயர்த்தக்கூடாது.
ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகப்போட்டி, பணவீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கு கூடுதல் மின்கட்டண உயர்வு என்பது பெரும் சுமையாக மாறும். வரிவருவாயை பெருக்குவதற்கு வணிகர்களை அச்சுறுத்தும் நடைமுறைகளை கையாளாமல், வரி செலுத்தும் முறைகளை எளிதாக்க வேண்டும். நேர்மையாக வரிசெலுத்தும் வணிகர்களுக்கு பாராட்டும், ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.