

கோவை,
கோவையில் ரூ.72.40 கோடியிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தவும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து கார் மூலம் கோவை சென்றார்.
முதலில் ரூ.72.40 கோடியிலான பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
பின்னர் முதல்-அமைச்சர் தலைமையில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி அனைத்து வசதிகளையும் கொண்ட மாவட்டம், கோவை மாவட்டம் என்றும் கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என கூறினார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது.
கோவை மாநகரில் அதிகளவில் பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. கோவையில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தொழிற்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அரசு அறிவித்த திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று முதலமைச்சர் கூறினார்.