இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிக்க நடவடிக்கை

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிக்க நடவடிக்கை
Published on

சென்னை,

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது மட்டுமன்றி, இலங்கை அரசு தற்போது கொண்டுவந்துள்ள புதிய மீன்பிடிச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறித்து, நமது கடற்பரப்புக்குள் மீன்பிடித்தாலும் எல்லை மீறி நுழைந்து கைது செய்து அச்சுறுத்துவதும், புதிய சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதும் இலங்கை அரசின் அடாவடித்தனத்தைக் காட்டுகிறது.

இலங்கை கடற்படை கைது செய்துள்ள 27 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப்பெற இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களுக்கு சொந்தமான 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com