

சென்னை,
தமிழக சட்டசபையில் நடந்து வந்த பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுகிறது. அரசுத் துறைகளுக்கு ஒதுக்க வேண்டிய மானியம் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக விவாதிக்க, முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நேற்று மாலை 3 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடியது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் நிதித்துறை, வருவாய்த்துறை, வணிக வரித்துறை, கைத்தறித்துறை, நகராட்சி நிர்வாகத் துறை, வீட்டுவசதித் துறை செயலாளர்களும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சட்டசபையில் நடக்கும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அரசுத் துறைகளின் சார்பில் அமைச்சர்கள் அறிவிக்கவேண்டிய புதிய அறிவிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசு வரும் ஜூலை மாதம் சரக்கு சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யவுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு அரசுத் துறைகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு அடமானக் கடன் கொடுப்பதற்கு ஒப்புதல் அளிப்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு கூடிய அமைச்சரவை, மாலை 4.30 மணிவரை நீடித்தது.