

சென்னை,
தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, அரசின் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு என்று தமிழக மக்களை வாட்டி வதைத்த நிலையில் தற்போது சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது.
நல்ல அரசு என்பது மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வதாக, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ்கள், பத்திரங்கள், பெயர் மாற்றங்கள் போன்ற அரசின் நடைமுறைகள் குறைந்த கட்டணத்தில், எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், எனவே சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
ஒத்திவைப்பு
அதேபோல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு, வருகிற 7-ந்தேதி நடக்க இருந்த ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் போட்டித்தேர்வை பிப்ரவரி 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தது போல, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் வருகிற 6,7-ந்தேதிகளில் நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்திவைக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.