காது, மூக்கில் நகை அணிந்திருந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியாதா? - டிடிவி தினகரன் கண்டனம்

மகளிரைத் தொடர்ந்து அவமதிக்கும் திமுகவினரின் அதிகாரத் திமிர் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
 கோப்புப்படம் 
 கோப்புப்படம் 
Published on

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

விருதுநகர் அருகே மகளிர் உரிமைத் தொகை கேட்டு வந்த பெண்களிடம் காது, மூக்கில் தங்கம் அணிந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஏளனமாகப் பேசிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, தன்னிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்த பெண் ஒருவரிடம், அம்மனுவை வாங்கி அவரின் தலையிலேயே அடித்த புகாருக்குள்ளான அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மகளிர் உரிமைத் தொகை கேட்டு வந்த பெண்களைத் தரக்குறைவாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, தற்போது காது, மூக்கில் நகை அணிந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கிடையாது என அமைச்சரின் மூலம் அறிவித்திருப்பது ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என வாக்குறுதியளித்துவிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதும், இலவச பேருந்து என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரைத் தரக் குறைவாக விமர்சிப்பதும், மனு அளிக்க வருவோரை மதிக்காமல் அவமதிப்பதும் திமுகவின் அடிப்படை குணமான ஆணவப் போக்கையும், அதிகாரத் திமிரையுமே வெளிப்படுத்துகிறது.

எனவே, தமிழக மகளிரைத் தொடர்ந்து அவமதிப்பதையும், தரக்குறைவாக விமர்சிப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுகவினரை, ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலின் மூலம் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப் போவது உறுதி என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com