

சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் தலைநகரான சென்னையின் இதயத்துடிப்பாக விளங்கும் புறநகர் ரெயில் சேவையை, பராமரிப்புப் பணிகள் என்கிற ஒற்றை வார்த்தையில் முடக்கி வைத்திருக்கும் தெற்கு ரெயில்வேயின் மக்கள் விரோதப் போக்கை, தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே, சென்னை செங்கல்பட்டு வழித்தடத்தில் 40 ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 49 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, ரெயில் பயணங்கள் மூலமாகவே வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
தமிழகத்தின் உழைப்பையும், வருவாயையும் மட்டும் உறிஞ்சிக்கொள்ளும் தெற்கு ரெயில்வே, தமிழகப் பயணிகளை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. சாமானிய மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதைத் தெற்கு ரெயில்வே உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்கள், போராட்டக் களமாக மாறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.