

பல்லடம்
பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பல்லடம் - திருப்பூர் மெயின் ரோடு அருகில் தெற்குபாளையம் பிரிவு பகுதியில் பிராமிஸ் நகர் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதன் அருகே பல்லடம் ராயர்பாளையத்திலிருந்து தெற்கு பாளையம் பிரிவில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் பிரதான வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால் பிராமிஸ் நகர் வழியாக செல்கிறது .இந்த நிலையில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பிரதான வாய்க்காலில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பிராமிஸ் நகர் வாய்க்காலில் வந்து கொண்டு இருந்த நிலையில், கிளை வாய்க்காலில் மரம், செடி, கொடிகள் புதர்கள் மண்டி கிடந்ததால்
தண்ணீர் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.அந்த பகுதியில் உள்ள வழித்தடங்களிலும், வாய்க்கால் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.மேலும் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளிலும் வாய்க்கால் கண்ணீர் கலந்து நிரம்பி வழிகின்றது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் நகருக்குள் வந்து மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல முடியாமல் திரும்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் இப்பகுதி பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
---