

மதுரை,
தாமிரபரணி ஆற்றின் மாசுபாடு தொடர்பான முக்கிய வழக்கு இன்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவித்தது.
ஈமச்சடங்குகள் பெயரில் ஆற்றில் கொட்டப்படும் பொருட்கள் பாபநாசம் முதல் தாமிரபரணி ஆற்றங்கரை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள்நீராடுவதோடு, இறந்தவர்களுக்கான ஈமச்சடங்குகளையும் மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், மதத்தின் பெயரில்கூட எந்த நீர்நிலையையும் மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. பாலியஸ்டர் போன்ற பொருட்கள் நீரில் மக்காமல் நீடிப்பதால், அவை ஆற்றின் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இந்திய கரு ஆமைகள் துணிகளில் சிக்கி உயிரிழக்கின்றன.
மக்களின் மத நம்பிக்கைகளை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை. ஆனால் அந்த நடைமுறைகள் சுற்றுச்சூழலுக்கும் பிறரின் உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. ஆற்றங்கரை அருகே கட்டப்பட்டு வரும் குளத்தை ஈமச்சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மாற்று வழியையும் பரிசீலிக்கலாம்.
தாமிரபரணி ஆற்றில் மேலும் மாசுபாடு ஏற்படாமல் தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், நிரந்தரத் தீர்வுக்கான பரிந்துரைகளை தாக்கல் செய்யவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.