தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது - சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது - சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்
Published on

சென்னை,

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்த இளைஞர்களை 100 சதவீதம் ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை சொல்கிறது. டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அதன்படி தமிழக அரசு நிரந்தரப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com